| தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
 இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
 இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
 வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
 விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
 அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 1] 
 
 
 | 
| இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
 கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்;
 கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்  அடியேன்;
 மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்,
 எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும்  அடியேன்;
 அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 2] 
 
 
 | 
| மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;
 செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
 திருக்குறிப்புத் தொண்டர் தம்    அடியார்க்கும் அடியேன்;
 மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,
 வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால்  எறிந்த,
 அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 3] 
 
 
 | 
| திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;
 பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்;
 பெரு மிழலைக் குறும்பற்கும்,   பேயார்க்கும், அடியேன்;
 ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்;
 ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு  அடியேன்;
 அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 4] 
 
 
 | 
| வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
 எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;
 ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்  அடியேன்;
 நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;
 நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,  அடியேன்;
 அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
 
 
 
 | [ 5] 
 
 
 | 
| 
 | 
| வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
 சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;
 செங்காட்டங்குடி மேய  சிறுத்தொண்டற்கு அடியேன்;
 கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்;
 கடல் காழி கணநாதன்  அடியார்க்கும் அடியேன்;
 ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்;
 ஆரூரன் ஆரூரில்   அம்மானுக்கு ஆளே .
 
 
 
 | [ 6] 
 
 
 | 
| பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய  புகழ்ச்சோழற்கு அடியேன்;
 மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்;
 விரி திரை சூழ் கடல் நாகை  அதிபத்தற்கு அடியேன்;
 கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன்,
 கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-  அடியார்க்கும் அடியேன்;
 ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 7] 
 
 
 | 
| கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
 நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற
 நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்  அடியேன்;
 துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
 தொல் மயிலை வாயிலான்   அடியார்க்கும் அடியேன்;
 அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்;
 ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .
 
 
 
 | [ 8] 
 
 
 | 
| கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்- காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
 மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை
 மன்னவன் ஆம்செருத்துணை தன்  அடியார்க்கும் அடியேன்;
 புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி
 பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்   துணைக்கும் அடியேன்;
 அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 9] 
 
 
 | 
| பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
 சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
 திரு ஆரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்;
 முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
 முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
 அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .
 
 
 
 | [ 10] 
 
 
 | 
| 
 | 
| மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
 தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
 திருநீல கண்டத்துப்  பாணனார்க்கு அடியேன்;
 என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
 இசைஞானி, காதலன்-திரு   நாவலூர்க் கோன்,
 அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
 ஆரூரில் அம்மானுக்கு அன்பர்  ஆவாரே .
 | 
No comments:
Post a Comment